குழந்தைக்கு ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
பிள்ளை பசியெடுத்து அழுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொடுங்கள். எத்தனை தடவை கொடுக்க வேண்டும் என்று வரையறை இல்லை. குழந்தைகளின் இரப்பை மிகவும் சிறியது என்பதால் அதிகமான உணவை ஒரே தடவியில் ஏற்று சமிபாடு அடையச் செய்ய முடியாது. அதனால் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுக்க வேண்டும்.
எவ்வளவு காலத்திற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
இதற்கும் வரையறை இல்லை .எத்தனை வருடத்திற்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். எந்தப்பாதிப்பும் ஏற்படாது. ஆனாலும் முதல் 5-6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாத முடிவில் தாய்ப்பாளினால் தனியே குழந்தைக்குரிய போசாக்கினை வழங்க முடியாது போவதால் மற்றைய உணவுகளை ஆரம்பிக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண் கர்ப்பம் தரித்தால் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாமா?
நிச்சயமாக .அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்வது எப்படி?
தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும். குழந்தை மார்பகத்தை உறிஞ்சும் போதே தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.அதுதவிர தாய் போதியளவு நீராகாரம், பழ ரசம் போன்றவை அருந்த வேண்டும்.
வேலைக்குப் போகும் பெண்கள் எவ்வாறு தாய்ப்பால் கொடுக்கலாம்?
நீங்கள் வேலைக்குப் போகும் நாட்களில் உங்கள் தாய்ப்பாலை ஒரு சுத்தமான கண்ணாடிப் பாத்திரத்திலேயே எடுத்து(கறந்து ) வைத்து விட்டுப் போங்கள். வீட்டிலேயே குழந்தையை பார்த்துக் கொள்பவர்களை புட்டிப் பாலுக்குப் பதிலாக உங்கள் தாய்ப்பாலைக் கொடுக்கச் சொல்லுங்கள்.
தாய்ப்பால் குளிரூட்டி இல்லாமல் நான்கு மணிநேரம் வரை பழுதடையாமல் இருக்கும் (20 degree C).குளிரூட்டியில் வைத்தால் ஐந்து நாட்கள் வரை பழுதாகாமல் இருக்கும்.
அதே நேரம் தாய்ப்பாலை deep freezer யில் வைத்தால் பல மாதங்கள் வரை பழுதாகாமல் இருக்கும்.
அதனால் வேலைக்குப் போவதொன்றும் தாய்ப்பால் கொடுப்பதற்கான தடை அல்ல.
Leave a comment